அவள் வானவில் !
என் இதயத்தில்
மழையடித்து முடிந்தபின்னே
மறைந்து விட்டாள் !!
தீர்க்கதரிசனம் !
என் கல்லறையில்
அலறிக் கொண்டிருக்கும்
உன் மௌனம் !!
வருடா வருடம்
திவசம் செய்கிறேன் !
உன் பட்டுச்சேலைக்கு
உயிர் நீத்த பட்டுப்புழுக்களுக்கு !!
நீ
பாடையில் ஏற்றிய
பாடல்களுக்குக்
கல்லறைத் தோட்டத்தில்
அமோக வரவேற்பு !!
எச்சரிக்கை மனமே !
படபடக்கிறது
அவள் விழிகள் !!
உன் மருண்ட விழிகளுக்கு
மருண்டு போய்
மிரளும் விழிகள்
என்னுடையவை !!
என்னை அகதியாக்கி
விட்டுத்தான்
நீ அதிபராகப்
பதவி ஏற்றாய் !!
என் கல்லறையில்
சாம்பலாக
நீ கொளுத்தி வைத்த
ஊதுபத்திகள் !!
நீ அமர்ந்திருக்கும்
சிம்மாசனத்தின் அடியில்
நசுங்கிப் போனது
என் விரல்கள் !
மீட்டப்படாமல் இருக்கிறது
நீ பரிசாகத் தந்த வீணை !!
நீ நெருப்பெனத் தெரிந்தும்
நான் நெருங்கி வருவது
உனக்கு வியப்பைத் தருகிறதா ?
என்ன செய்வது
உனக்குத் தெரியாது
நான் விட்டில் பூச்சி என்பது !!
வேண்டாம்
பரிதாபப் பார்வை !
இரத்தக் காட்டேரிகள்
செய்யுமோ
இரத்த தானம் !!