அட உன் தாய்மொழியும்
தமிழ்தானா ?
நான் மௌனம்
என்றல்லவா நினைத்திருந்தேன் !!
நீ எது செய்தாலும்
எனக்குப் பிடிக்கும் !
எனக்குப்
பிடிக்க வேண்டும்
என்று நீ செய்யும்
சில செயல்களைத் தவிர !!
நிலவில் கால்
பதித்ததெல்லாம்
சாதனையா ?
உன் இதழில்
இதழ் பதித்ததை விட !!
கொலுசாகவோ
செருப்பாகவோ
அதைப் பற்றிக்
கவலையில்லை !
உன் காலடியில்
கிடக்க வேண்டும்
அவ்வளவுதான் !!
நான்
பட்டுப்புழுக்களின்
நண்பன் என்றாலும்
எனக்குப் பிடித்தது
பட்டாம்பூச்சிகளே !!
எப்போதும்
உன் மீது ஒரு
அழகிய வாசனை
இருக்கும் !
நீ பூசும் பவுடர்
வாசனைதான்
அதைக் கெடுக்கிறது !!
காதலர்கள்
புலம்புகிறார்கள் !
அவர்கள்
இதயத்தைத் தொலைத்து
விட்டார்களாம் !!
எனக்குக் கவலையில்லை !
நான்தான் பத்திரமாக
உன்னிடம் கொடுத்து
வைத்துள்ளேனே !!
நான் சுவாசிப்பதெல்லாம்
நீ அருகில் உள்ளபோது
உன்னையும்
இல்லாதபோது
உன்
நினைவுகளையும்தான் !!
நீ அருகில் இருக்க
நான் பாடம் கவனிப்பது
அர்த்த ராத்திரியில்
அர்த்த சாஸ்திரம்
படிப்பதற்கு சமமானது !!
கோபப்படுவதா
பரிதாபப்படுவதா ?
ஜன்னலோரத்தில்
உன்னைப் பற்றி
நினைத்துக் கொண்டு
பயணிக்கும் என்
தோள்களின் மேல்
சாயும் பயணியைப் பார்த்து !!
நீ இருக்கும்
என் மனதில்
பாடங்களைப் பதிய
வைக்க சங்கடமாகத்தான்
இருக்கிறது !!